அதிமுக, பாமக குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

அதிமுக மற்றும் பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு பாஜகதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால் அந்த உரிமையை தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக இணைந்து பறித்து வருகின்றன. இதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்று (செப்.7) நெல்லையில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்,” என்றார்.

மேலும் அவர்,

“தமிழகத்தில் பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கப்பலைப் போன்றது. மக்களால் ஏற்கப்படாத கூட்டணி அது. அதனால் தான் டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகினார். பாஜக எங்கு சேர்ந்தாலும் அங்கு சிதைவுதான் நிகழ்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸை உடைத்ததுபோல, தமிழகத்தில் அதிமுக 4 பிரிவுகளாக சிதறி கிடப்பதற்கும், பாமகவில் பிரச்சினை தொடர்வதற்கும் பாஜகதான் காரணம். யார் கூட்டணியாக சேர்ந்தாலும் இண்டியா கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது,” எனவும் தெரிவித்தார்.

அத்துடன்,

“தமிழகத்தில் காங்கிரஸ் உயிர்ப்புடன் செயல்படுகிறது. ‘கிராமம் நோக்கி காங்கிரஸ்’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 80% கிராமங்களில் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு க்யூஆர் கோடுடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் 2 லட்சம் கிராமக் கமிட்டிப் பொறுப்பாளர்களை ஒன்றுகூட்டி, ராகுல் காந்தி தலைமையில் பெரிய மாநாடு நடத்த உள்ளோம்,” என்றார்.

இந்த சந்திப்பில் எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்எல்ஏ ரூபி மனோகரன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box