“எனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு நன்றி” – செங்கோட்டையன்
அதிமுக ஒன்றிணைவதே முக்கியம் என்று எழுப்பிய குரலுக்காக தனது பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைவதே அவசியம் என செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார்.
இதனால் சர்ச்சை உருவாகியது. பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, செங்கோட்டையனை கட்சி பதவிகளிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனிடையே, நேற்று முதல் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, நேரில் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,
“நேற்று முதல் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் என்னை சந்திக்க வரி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி. தமிழக முழுவதும் ஏராளமான தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.