கொடைக்கானல்: விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம்; வாகன நெரிசல்

கொடைக்கானலில் மழை பெய்து இயற்கையின் அழகை உணர்ந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மிதமான மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

மிலாடி நபி விடுமுறையின் தொடர்ச்சியாக சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை சேர்ந்து கொண்டதால், சுற்றுலா பயணிகள் வருகை பெருகியது. இதனால், மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் போன்ற இடங்களை பார்த்து ரசித்தனர். மேகக் கூட்டங்கள் அருகிலிருந்து வந்து சுற்றுலாபயணிகளை சூழ்ந்து கொண்ட காட்சி மகிழ்ச்சியளித்தது. நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் படகுசவாரியையும் அனுபவித்தனர்.

மேல்மலைப்பகுதிகளில் மேகக்கூட்டங்கள் சாலையை மூடுவதால் எதிரே வரும் வாகனங்களையும் தெளிவாக பார்க்க முடியவில்லை. அதிக சுற்றுலா வருகையால், சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் மலைச்சாலையில் வரிசையாக காத்திருந்து சென்றன.

கடந்த வாரம் வெயில் அதிகமாக இருந்த கொடைக்கானலில், இந்த வாரம் தொடர்ந்த சாரல் மழை மற்றும் தணியாத நீர்சூழல் காரணமாக இனிமையான சூழல் உருவாகியுள்ளது. விடுமுறையை பயன்படுத்தி வந்த சுற்றுலாபயணிகள் இயற்கையின் அழகை விரும்பத்தகுந்த முறையில் அனுபவித்தனர்.

Facebook Comments Box