முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிறு) சென்னை திரும்பினார்.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் ஜெர்மனியையும் பின்னர் இங்கிலாந்தையும் சுற்றிப்பார்த்தார். அங்கு அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனைகள் நடத்தினார். இந்த பயணத்தில் தொழில் – முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பல அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
சுற்றுப்பயணத்தின் போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்தார். ஜி.யு. போப்பின் கல்லறைக்கும், கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திற்கும், அம்பேத்கர் இல்லத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார். அதேபோல், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சொந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்லியில், அவரது சிலை நிறுவப்பட்டதற்காக, அவருடைய குடும்பத்தினரும் தேவாலய நிர்வாகிகளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
8 நாட்கள் நீடித்த வெளிநாட்டு பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின், நேற்று பிற்பகல் லண்டனில் இருந்து துபாய் வழியாக புறப்பட்டார். இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார் என தகவல். அவருக்கு விமான நிலையத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.