திருப்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முன்னேற்பாடுகள் இல்லாததால் நெரிசல் – பொதுமக்கள் அவதி
திருப்பூர் நல்லூர் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-ம் கட்ட முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாநகரின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட 46, 47 மற்றும் 48-வது வார்டுகளுக்கான முகாம் இன்று (செப். 9) திருப்பூர் கூலிபாளையம் சாலை ஆர்.கே.ஜி. மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிகமான பொதுமக்கள் திரண்டதால் கடுமையான நெரிசல், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மின் கட்டணம் பெயர் மாற்றம், வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு, கட்டிட அனுமதி, பிறப்பு/இறப்பு சான்றுகள், ஆதார் திருத்தம், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், வாரிசு சான்று, வருவாய்த் துறை போன்ற 44 துறைகளுக்கு மனுக்களை பொதுமக்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கி வருகின்றனர்.
திருப்பூரில் நடந்த முகாமில் போதிய முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்யாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அங்கு உள்ளவர்கள் கூறியது:
“மண்டபத்திற்கு வெளியே சாமியானா அமைக்கப்பட்டிருந்தது. வெயிலில் பொதுமக்கள் சோர்ந்தனர். வரிசையில் நிற்கும் பகுதியின் குடிநீர் வசதி இல்லை. சீல் வைக்க பொதுமக்கள் ஒரே வரிசையில் நிறுத்தப்பட்டதால் கால்கடுக்க முடியாமல், சிலர் முண்டியடித்து மனுக்களை வழங்கினர்.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பதாரர்களை கதவை அடைத்து ஆண்கள் நின்று கொண்டதால் பெண்கள் உள்ளே செல்ல சிரமப்பட்டனர். போதிய பெண் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை நியமித்திருந்தால் பெண்கள் நிம்மதியாக உள்ளே சென்றிருப்பார்கள்.
துறைவாரியாக தடுப்புகள் அமைக்கப்படாமல் விட்டதால், வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் உட்பட பலர் அவதி அடைந்தனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.