செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தெற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதியில், மேலும் தென்னிந்தியாவின் பல இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் செப்டம்பர் 11ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில், 12ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30–40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், செப்டம்பர் 13 முதல் 16ஆம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரி கடல் பகுதிகளில் நாளை முதல் 13ஆம் தேதி வரை மணிக்கு 40–50 கிமீ வேகத்தில், சில சமயம் 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழைப் பதிவின்படி, அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 7 செ.மீ; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், புகையிலை நிலையம், கொடைக்கானல், ஒட்டன்சத்திரத்தில் தலா 6 செ.மீ; கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், சேலம், நீலகிரி மாவட்டம் கோடநாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருப்பத்தூர், தேனி மாவட்டம் சோத்துப்பாறை, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box