எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஆர்.எஸ். பாரதி நீதிமன்றத்தில் ஆஜர்
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கருத்துகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று (செப்டம்பர் 11) சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியளிக்க ஆஜரானார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், டெல்லி போலீசார் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுகவுடன் இணைத்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது, திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார். மேலும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடந்தபோது, சாட்சி விசாரணை பதிவுக்காக வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி ஆஜராகி சாட்சிய ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் கௌதம் கால அவகாசம் கோரியதால், நீதிபதி சாட்சி விசாரணையை வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.