பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்

பெற்றோரை இழந்த சிறார்களை கவனித்து, அவர்களின் கல்வி தடை இல்லாமல் தொடரும் வகையில், 18 வயது வரை மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் ஆரம்பிக்கிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:

“சமூக சமத்துவத்துடன் கூடிய முன்னேற்றமான தமிழகம் உருவாக, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் ஒழுங்கான வளர்ச்சிக்காக அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. வறுமையில் சிக்கியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ‘தாயுமானவர்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் அல்லது ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க முடியாத குழந்தைகளுக்காக ‘அன்புக் கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், குழந்தைகள் 18 வயது அடையும் வரை மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும். அதோடு, பள்ளிக் கல்வி முடிந்த பின் கல்லூரி படிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க உள்ளார்.

மடிக்கணினிகள் வழங்குதல்: பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, அரசு உதவியுடன் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்குகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box