அண்ணா பிறந்தநாள் விழா: குன்னூரில் திமுக–அதிமுக மோதல் பரபரப்பு!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவையொட்டி குன்னூரில் திமுக, அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது.

குன்னூரில் உள்ள அண்ணா சிலைக்கு முதலில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். பின்னர் அருகில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், நகராட்சி குறைகளை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்தனர். அதே நேரத்தில் திமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்தனர்.

அதிமுகவினரின் உரையில் திமுக மீது விமர்சனம் செய்யப்பட்டதால், திமுகவினர் ஆவேசமடைந்தனர். மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ தலைமையில் செல்வம், பாரூக், கோவர்த்தனன் உள்ளிட்ட திமுகவினர் அதிமுக கூட்டத்துக்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அனுமதி பெற்றிருந்த அதிமுகவினர், திமுகவினர் உறுதிமொழி எடுக்கும் வரை ஒலிபெருக்கியை நிறுத்தினர். பின்னர் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர். சிறிது நேரம் பதற்றம் நிலவிய நிலையில், பின்னர் நிலைமை சமநிலைக்கு வந்தது.

Facebook Comments Box