வானிலை முன்னறிவிப்பு: காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை சாத்தியம்!
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், சேலம், மதுரை உள்ளிட்ட மொத்தம் 19 மாவட்டங்களில் நாளை (செப்.17) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகியுள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் நாளை (செப்.17) மற்றும் செப்.18 அன்று பல இடங்களில், செப்.19 அன்று சில இடங்களில், செப்.20 முதல் செப்.22 வரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (செப்.17) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை ஏற்படும்.
செப்.18 அன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
செப்.19 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை ஏற்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (செப்.17) சூறாவளிக் காற்று மணிக்கு 40–50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசும் வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8.30 மணி நிலவரப்படி) அதிகபட்சமாக சென்னை ஒக்கியம்-துரைப்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ., கண்ணகி நகர், வேலூரில் தலா 11 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வேலூர் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், மணலி, டிஜிபி அலுவலகம், மணலி புதுநகரில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.