12,000+ தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்திய சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:
தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறப்பு முகாம்கள் மூலம் 46,122 தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
2021 முதல் இதுவரை மொத்தம் 1.34 லட்சம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி, மேலும் 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சோழிங்கநல்லூர், புளியந்தோப்பு, மீனம்பாக்கம் உள்ளிட்ட 5 மையங்களில், நாளொன்றுக்கு சராசரியாக 115 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
நாய்களை முறையாகப் பிடித்து, மீண்டும் விடுவிப்பதை உறுதி செய்யும் வகையில் கியூஆர் குறியீடு காலர் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 12,255 தெருநாய்களுக்கு கியூஆர் குறியீடு காலர் மற்றும் முழுமையான தகவல்களுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தெருநாய் தொல்லைகள் குறித்த புகார்களை 1913 என்ற உதவி எண்ணிலும் அல்லது மாநகராட்சியின் வாட்ஸ்ஆப் எண் 94450 61913 மூலமாகவும் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.