கூட்டாட்சிக்கு எதிராக இந்தியை திணிக்கும் முயற்சி: அமித் ஷாவுக்கு தவெக கண்டனம்
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து மொழிகளையும் இணைத்து வளர்ந்த, மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் தேசத்தில், 22 அலுவல் மொழிகளை கொண்டிருக்கும் அரசு நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது சர்வாதிகார போக்கு. ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. பாஜக முதன்முதலில் ஆட்சியமைத்ததிலிருந்து, ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றை தலைமையில் சுருக்க முயற்சி செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியை திணிக்க முயல்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியை திணிக்க முயன்றது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் எத்தனை மொழியையும் படிக்கலாம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வலுக்கட்டாய திணிப்பு ஏற்க முடியாதது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும். இதை பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.
இந்தியை திணிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தோல்வி கண்டும், விடாமுயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் 22 அலுவல் மொழிகள் உள்ள நிலையில், இந்தியை மட்டும் தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக்கும் முயற்சி ஏதேச்சாதிகாரப் போக்கு.
ஒன்றிய அரசாகிய பாஜக, நாட்டின் மத, மொழி, மாநில பன்முகத்தன்மையை அரவணைக்க வேண்டும். அதுவே ஒட்டுமொத்த பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழி. இந்தி பேசாத மாநிலங்களையும், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களையும் புறக்கணித்து, ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
எனவே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான இந்தி திணிப்பை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தனது கருத்தை உள்துறை அமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்று, தமிழக வெற்றி கழகத் தலைவரின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்” என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.