டெட் தேர்வு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யும் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு
டெட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்த மாத இறுதிக்குள் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் சி.கே. பாரதி, பொதுச் செயலாளர் சாவா ரவி, துணைத் தலைவர் அ. மயில், செயலாளர் அ. மாயவன், செயற்குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,
- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,
- கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 23-இல் மாற்றம் செய்வது குறித்து,
பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாடு முழுவதும் 25 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) குறிப்பிடாத நிலையில், அதனை சீராய்வு மனுவில் வலியுறுத்த உள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.