எம்பிக்கள் நிதி உயர்வு – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு (எம்எல்ஏக்கள்) மாநில அரசு தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கி வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான (எம்பிக்கள்) தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (திஷா) குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது, தமிழகத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் கவனமுடன் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சியை உறுதி செய்யும் பணிகளில் அரசு தீவிர அக்கறையுடன் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மாநிலத்தின் 37 ஊரக மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.67.97 கோடி சுழல் நிதி, 75,127 குழுக்களுக்கு ரூ.801.62 கோடி சமூக முதலீட்டு நிதி மற்றும் 13,546 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.75.73 கோடி நலிவு நிலைக்குறைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளன.
முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 பேர் பயனடைந்துள்ளனர். அதில் 17,207 சிறப்பு குழுக்களுக்கு ரூ.25.81 கோடி சிறப்பு சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.1,25,362 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.
2025–26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 3 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13,062 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021–22 முதல் 2025–26 வரை ரூ.1,274 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 12,045 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9,755 பணிகள் முடிவடைந்துள்ளன; 2,290 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தம் ரூ.702 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 234 தொகுதிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், எம்எல்ஏக்களுக்கு மாநிலம் ரூ.3 கோடி வழங்கி வருவதால், எம்பிக்களின் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கோரிக்கையை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ‘ஈ-சாக்ஷி’ போர்ட்டலில் ஏஜென்சி ஒப்புதல், ‘பிஎப்எம்எஸ்’ போர்ட்டலில் திட்ட ஒப்புதல்கள் மத்திய அரசால் வழங்கப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மாநில நோடல் ஏஜென்சிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், ஈ-சாக்ஷி போர்ட்டல் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
‘பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் – ஒரு துளி நீரில் அதிக பயிர்’ திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 55% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45% மானியமும் மத்திய அரசு வழங்கி வந்தாலும், தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கி வருகிறது. இதன் 12% ஜிஎஸ்டியையும் தமிழகமே ஏற்றுக்கொள்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1,50,560 ஹெக்டேர் நிலப்பரப்பில் 1,57,279 விவசாயிகள் ரூ.1,312 கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவியை பெற்றுள்ளனர். இதனால், திட்டப்பயன்களை விவசாயிகளிடம் சிறப்பாக கொண்டு சேர்ப்பதில் தமிழகமே முன்னிலையில் உள்ளது.
“ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே முக்கிய நோக்கம்” என்றும் முதல்வர் கூறினார். தற்போது மாநிலத்தின் 54,449 குழந்தைகள் மையங்களில் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. அதோடு, 5.5 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்படுகிறது.
இதன் விளைவாக, 25% ஆக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8% ஆகவும், 14.6% ஆக இருந்த மெலிவுத்தன்மை 3.6% ஆகவும், 22% ஆக இருந்த எடை குறைவு 5.7% ஆகவும் குறைந்துள்ளது. மேலும், “ஊட்டச் சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் 1,07,006 குழந்தைகளில் 77.3% இயல்புநிலையில் திரும்பியுள்ளனர்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குதொகை தாமதமின்றி வழங்கப்படுகிறது. அதுபோல் மத்திய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர்கள் துறைவாரியாக விளக்கமளித்தனர். எம்பிக்கள், எம்எல்ஏக்களும் கலந்துரையாடினர் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.