அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் வழங்கிய நகையை திருட்டு செய்ய முயற்சி செய்யும் வழக்கில் தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 தனிப்படை காவலர்கள் சிபிசிஐடி போலீஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி, உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் அஜித்குமார் தாயார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டது. இதன்படி, சிபிஐ விசாரணை முடித்து ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சிபிஐ குற்றப்பத்திரிகையை ஆக.20-ல் ஆன்லைன் வழியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் தனிப்படை வேன் ஓட்டுனர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்காக நீதிபதிகள் சிபிஐக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப்பத்திரிகை நீதிபதி திருப்பி அனுப்பினார். சில குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.
மதுரை தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் வழக்கு நேற்று மீண்டும் நடைபெற்றது. சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்கள் பாதுகாப்புடன் ஆஜராகியிருந்தனர். 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரனும் நீதிபதி முன் ஆஜரானார். சிபிஐ தரப்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் குற்றப்பத்திரிகையை படித்து பார்க்க அவகாசம் வழங்கி, அடுத்த விசாரணையை 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.