அதிமுக முன்னாள் எம்.எல்ஏ சத்திய நாராயணன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் மீது வழக்கை தொடர அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக, அனுமதி கிடைத்ததும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சத்திய நாராயணன், வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி 64 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், சென்னை தியாகராய நகர் தொகுதியில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் ஆர்.பால சுப்பிரமணியன் வழக்குகளை விரைந்து விசாரிக்க, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக 2024 செப்டம்பரில் வழக்கில் புலன் விசாரணை முடிந்ததும், குற்றப் பத்திரிகை 4 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது.

சமீபத்தில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் மனு விசாரணை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புலன் விசாரணை முடிந்து, வழக்கை தொடர அரசு அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் மனுவை ஏற்று, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய விரைந்து அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

Facebook Comments Box