தங்க விலை சாதனை உயர்வு – வியாபாரிகள் விளக்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ரூ.83,440 என்ற சாதனை விலையில் விற்பனையாகியது. இதனால், தங்கம் விரைவில் ரூ.84 ஆயிரத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிழப்பு ஆகியவை தங்க விலை நிர்ணயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 20ஆம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.82,320 என்ற அளவுக்கு சென்று சாதனை படைத்தது. அதன் பின்னர் மீண்டும் உயர்ந்து, நேற்று ரூ.83,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.140 அதிகரித்து, ரூ.10,430 ஆனது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.91,024-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்க விலையோடு, வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.148 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.3,000 உயர்ந்து ரூ.1.48 லட்சமாகவும் இருந்தது.

இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ். சாந்தக்குமார் கூறியதாவது:

“அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதோடு, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவு, சர்வதேச அரசியல் குழப்பங்கள் ஆகியவை தங்கத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவே விலை உயர்வுக்குக் காரணம். வருகிற நாட்களில் தங்க விலை மேலும் ஏறும் சாத்தியம் உள்ளது” என்றார்.

Facebook Comments Box