காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் ரூ.100.82 கோடியில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்களின் புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் கட்டப்பட உள்ள மாநில பயிற்சிக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த வளாகத்தில் 300 பயிற்சியாளர்கள் தங்குமிடம், பயிற்சி மைதானம், சமையலறை, மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையம், மின்சாரம், சாலை, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டையில் குடியிருப்பு, நிர்வாகக் கட்டிடம், ஆயுதக் கிடங்கு, பாசறைகள், செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி, தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் ஆகிய இடங்களில் காவல் நிலையங்கள், சென்னை எழும்பூரில் குதிரை லாயங்கள் ஆகியவை உள்ளிட்ட ரூ.97.66 கோடியில் கட்டப்பட்ட 342 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 6 காவல்துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்ட தீயணைப்புத் துறை மத்திய மண்டலத்தை 2 ஆக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ரூ.1.04 கோடியில் புதிய மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டது. அதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்காக ரூ.2.12 கோடியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு, அதை முதல்வர் திறந்து வைத்தார்.
பள்ளி, விடுதி கட்டிடங்கள்:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.3.94 கோடியில் கூடுதல் வகுப்பறைகள், விடுதி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை ராணிமேரி கல்லூரி, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் ரூ.61.44 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 1,050 மாணவ, மாணவிகளுக்கான 8 சமூகநீதி விடுதி கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் பணிகளையும் மேற்கொண்டார்.
இதனுடன், 23 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 18 இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கடராமன், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.