இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் செண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ச்சியாக அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, பொதுச் செயலாளராக இருந்த சுதாகர் ரெட்டி 2019-ல் ஓய்வு பெற்ற பிறகு, அந்த பதவிக்கு டி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. பின்னர், 2022-ல் ஆந்திர மாநிலம், விஜயவாடா நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் டி.ராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 3-வது முறையாக அவர் பொதுச் செயலாளராகத் தொடர்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விதி படி, நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால், டி.ராஜா தற்போது 76 வயது ஆனாலும், அவருக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், டி.ராஜா இண்டியா கூட்டணி தலைவர்களுடன் வலுவான உறவை வைத்துள்ளார். அதன்படி, பிஹார் மாநில கட்சித் தலைமை அவர் தலைமைப் பொறுப்பில் தொடர வேண்டும் என வாதிட்டுள்ளது. தொடக்கத்தில், இந்த பதவிக்காக கேரளா பினோய் விஸ்வம் பரிசீலிக்கப்பட்டார்; ஆனால் அவர் மாநில அரசியலில் தொடர விருப்பம் தெரிவித்தார்.

டி.ராஜா தமிழகத்தின் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box