2026 தேர்தலில் அமமுக சார்ந்த கூட்டணிதான் வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக சேர்ந்து செயல்படும் கூட்டணிதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ஜி. செந்தமிழன், கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, மாவட்ட செயலாளர் எஸ்.வேதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அம்பத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிடிவி தினகரன் விரிவாகக் கூறினார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஒரு கட்சித் தலைவராக உள்ள பழனிசாமி, மற்றொரு கட்சித் தலைவரை அநாகரீகமாக விமர்சிப்பது அவரின் தரத்தையே வெளிப்படுத்துகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் என்னை சந்திக்கவில்லை; வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். பழகுவதற்கு, நட்புக்கு சிறந்த நண்பர் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலின் போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அவரது செயல்பாடுகளும் தன்மையும் தான் காரணம். சிலர் எங்களை தூண்டிவிடுகிறார் என்ற தவறான கருத்துகளை பரப்புகிறார்கள்; அது உண்மை இல்லை.

பழனிசாமி மாதிரியான பெரிய தலைவர்கள் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நாங்கள் ஜனவரிக்கு பிறகு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்பதற்கான எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால், அமமுக இடம்பெறக்கூடிய கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக அமையும். தவெக நிர்வாகிகளுடன் அமமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என சில ஊடகங்களில் வந்த செய்தி உண்மை இல்லை. எங்கள் கூட்டணி குறித்து டிசம்பர் மாதத்தில் தெளிவாக அறிவிப்போம்” என்றார்.

Facebook Comments Box