சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் ஈழம், காஷ்மீர் பிரச்னை, நீயூட்ரினோ திட்டம், சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் ஆகியவற்றை பற்றி பேசியபோது மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கருத்துகளை தெரிவித்தார்.
அந்த உரை கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது எனக் கூறி, துணைக் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் தரமணி போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. விசாரணையை நிறுத்தவும், வழக்கை ரத்து செய்யவும் சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கர், “சீமான் கலவரத்தை தூண்டும் வகையில் பேசவில்லை; அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
அந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.