தமிழகத்திற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்
அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற 44வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இணைந்தனர்.
இந்த சந்திப்பில் நீர்வளத்துறை செயலர் ஜெ. ஜெயகாந்தன், மேட்டூர் அணையில் தற்போது 92.105 டி.எம்.சி. நீர் இருப்பதாகவும், விநாடிக்கு 8,419 கன அடியாக நீர்வரத்து உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், கர்நாடக அணைகளிலும் போதுமான அளவு நீர் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பில்லிகுண்டுலுவில் 20.22 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு மேலாண்மை ஆணைய தலைவர் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும், கர்நாடகத்திற்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.