வானிலை எச்சரிக்கை: தமிழகத்தில் அக்.3 வரை மழை பெய்யும் சாத்தியம்

தமிழகத்தில் நாளை முதல் அக்டோபர் 3 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தக் குறைபாடு, நாளை தெற்கு ஒடிசா – சத்தீஸ்கர் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

மேற்கு திசை காற்றில் வேக வேறுபாடு காணப்படுவதால், நாளை (செப்.28) முதல் அக்.3 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் சிறிய அளவு முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பாகங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகக் கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் அருகிலுள்ள குமரி கடல் பகுதிகளில் நாளை காற்றின் வேகம் மணிக்கு 40 – 50 கிமீ வரை வீசக்கூடும். இடையிடையே 60 கிமீ வேகமும் அடிக்கக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப் பதிவுகள்:

  • கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 8 செ.மீ
  • திற்பரப்பு 7 செ.மீ
  • சிற்றாறு, சுருளக்கோடு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை தலா 6 செ.மீ
  • சோலையார், சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, குழித்துறை, தேனி மாவட்டம் பெரியாறு தலா 5 செ.மீ

இவ்வாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

Facebook Comments Box