“போலிஸாரை குற்றம் சாட்டுவதும், விஜயை காரணம் எனச் சொல்லுவதும் பிரச்சினையை விலகச் செய்வதற்கே பயன்படும்” – திருமாவளவன்
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை அடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:
“கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 11 பேரை சந்தித்தோம். 65 வயது மதிக்கத்தக்க சுகுணா என்பவரின் நிலை கவலைக்குரியது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வரும் பலரையும் பார்த்தோம்.
தமிழகத்தில் இதுவரை பல தலைவர்கள் லட்சக்கணக்கான மக்களை கூட்டமாக திரட்டியுள்ளனர். ஆனால் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறாத நிலையில், முதல்முறையாக இது நிகழ்ந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதை அறிந்தவுடன் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் வந்து ஆறுதல் தெரிவித்தது மனநிறைவை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இது கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரமான விபத்து மட்டுமே. இதில் யாரும் அரசியல் ஆதாயத்திற்காக கருத்து தெரிவிப்பதும், அரசியல் விளையாட்டு ஆடுவதும் பொருத்தமல்ல. விஜயை குற்றம் சொல்வதோ, போலீஸை குற்றம் சொல்வதோ பிரச்சினையை விலகச் செய்வதற்கே உதவும். அது பாதிக்கப்பட்டோருக்கு உதவாது. எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தடுப்பதற்கும் அது உதவாது. எனவே இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு.”