தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகரை இணைக்க ரூ.165 கோடியில் இரும்பு பாலம் திறப்பு
சென்னை மாநகராட்சி சார்பில், தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.164.92 கோடியில் கட்டப்பட்ட ஜெ.அன்பழகன் இரும்பு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் உயரிய தொழில்நுட்பத்துடன் 3,800 டன் இரும்பால் வடிவமைக்கப்பட்ட இந்த முதன்மை இரும்பு மேம்பாலம், ரூ.164.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
மேம்பாலம் சிஐடி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை சாய்வுத் தளப் பகுதியில் இருந்து சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கிறது. இதன் மூலம், தெற்கு உஸ்மான் சாலை – பர்கிட் சாலை – மேட்லி சாலை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – தென்மேற்கு போக் சாலை – நியூ போக் சாலை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை – சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுகிறது.
புதிய மேம்பாலம் 1,200 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் அகலம் கொண்டது, 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தில் தினசரி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இந்தப் பாலத்திற்கு தி.நகர் தொகுதியின் மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து பார்வையிட்டார். நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, ஆ.ராசா, எம்.பி., எம்எல்ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், துறையின் செயலர் தா.கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன், சென்னை மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜானகிராமன், தி.நகர் கிழக்கு பகுதி திமுக மாவட்ட பிரதிநிதி ஜெ.சீனிவாசன், தி.நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.