‘விஜய் அரசியலுக்கு புதுமுகம்’ – தவெகவுக்கு செல்லூர் ராஜு அறிவுரை
விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே பலரும் விமர்சனம் செய்துள்ளனர். தவெக கூட்டத்தை காவல் துறை கட்டுப்படுத்த முடியாமல் போனது. விஜயும் தாமதிக்காமல் இருந்திருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். அவரை அதிகமாக விமர்சித்து வருகின்றனர். 2010-இல் மதுரை பாண்டிக்கோயிலில் அதிமுக கூட்டம் ஒன்று நடந்தது. அதில் இரண்டரை லட்சம் மக்கள் திரண்டனர். சாலைகள் முழுவதும் மக்கள் கூட்டமாக இருந்தது. அப்போது ஜெயலலிதா விமான நிலையத்திலிருந்து மாநாட்டு திடலுக்கு வர இரண்டரை மணி நேரம் எடுத்துக் கொண்டது. ஆனாலும் அதை நாங்கள் கட்டுக்கோப்பாக நடத்தியிருந்தோம். ஆனால் கரூரில் 25 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருந்தும் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்தது மன உளைச்சலை தருகிறது.
இனி தவெக தலைவர் ஒரு மாவட்டத்தில் ஒரே இடத்தில் மக்கள் சந்திப்பதற்குப் பதிலாக, தொகுதிவாரியாகச் சென்று சந்திக்கலாம் அல்லது பொதுவான திடலில் கூட்டம் நடத்தலாம். விஜய் தனது ஆதங்கத்தை வீடியோவின் மூலம் தெரிவித்துள்ளார். உயிரிழப்புக்கு காரணமானவர் யாராக இருந்தாலும், அவரின் குடும்பமே அதற்குப் பொறுப்பு தவிர்க்க முடியாது.
தவெக கூட்டத்தை காவல் துறை கட்டுப்படுத்த இயலவில்லை. விஜயும் தாமதிக்காமல் இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையும் வேறு இடத்தை வழங்கியிருக்கலாம்” என்றார்.