ஸ்ரீராமர் படத்தை அவமதித்த வழக்கில் திருச்சியில் ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் 4 பேர் கைது
திருச்சி பகுதியில் ஸ்ரீராமர் படத்தை தீ வைத்து எரித்த ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகளை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்த அமைப்பின் 4 நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள அயன்புத்தூர் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி இரவு ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடந்தது. அதில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் 6 பேர் ஸ்ரீராமர் படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனரை அவமதித்து தீ வைத்துக் கொளுத்தினர். மேலும், ராமரை இழிவுபடுத்தும் விதமாகவும், ராவணனைப் புகழ்ந்து பேசும் வகையிலும் உரையாற்றினர். அந்த நிகழ்ச்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இந்த சம்பவம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் வகையில் இருந்ததால், சமூக வலைதளங்களை கண்காணித்து வந்த காவலர் கார்த்திக், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (36) கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீராமர் பட அவமதிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஒருங்கிணைப்பாளர் என்.ஆர். சீனிவாசன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், என்.ஆர். சீனிவாசன், பாஜக மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, மாநில மகளிரணித் துணைத் தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் தலைமையில் குண்டூர் எம்ஐஇடி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஐந்தாம் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நெப்போலியன் (31), சிலேஸ்வரன் (30), வசந்தகுமார் (21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பாண்டியன் உள்ளிட்ட மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.