வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு
தமிழக கோயில்களிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மேலும் 28 சுவாமி சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒரு ஆண்டு பயிற்சி முடித்த 89 மாணவர்கள் (இதில் 2 பெண்கள் உட்பட), மூன்று ஆண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்கள், தவில் மற்றும் நாதஸ்வரப் பயிற்சிப் பள்ளியில் மூன்று ஆண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்கள் என மொத்தம் 108 பேருக்கு சான்றிதழ்கள் நேற்று அறநிலையத் துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“2021 முதல் இதுவரை பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற 213 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 43 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் பெண்கள். மேலும், திமுக ஆட்சியில் இதுவரை 3,707 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கோயில்களில் சிலைகளை பாதுகாக்கும் வகையில், ஸ்ட்ராங்ரூம்கள் (பாதுகாப்பு அறைகள்) இந்த ஆட்சிக் காலத்தில் 1,800 வரை அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 48 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 28 சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் நடந்த சிலைத் திருட்டுகளை ஒப்பிடும்போது, தற்போது 10 சதவீதமும் கூட நடைபெறவில்லை” எனக் குறிப்பிட்டார்.