கரூர் நெரிசல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு
கரூர் வேலுசாமிபுரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று (அக்.4) காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இது இந்தியாவில் இந்த ஆண்டு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவங்களில் மிக அதிக உயிர்ப்பலி நிகழ்த்தியதாகும். அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இத்தகைய கூட்ட நெரிசல் இந்திய வரலாற்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, கரூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர், தமிழக காங்கிரஸ், இடதுசாரி தலைவர்கள், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர். தவெக தரப்பைத் தவிர, மற்ற அனைத்து கட்சியினரும் கரூருக்கு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கிஷோர் மக்வானா கரூர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு செய்தார். உயிரிழந்த குழந்தை துருவ் விஷ்ணுவின் வீட்டில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கியதோடு, சம்பவ விவரங்களை விசாரித்தார். பின்னர் வடிவேல் நகரில் உயிரிழந்த காவலர் மனைவி சுகுன்யாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஒருவரை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் தொடர்ந்து ஏமூர் புதூர் கிராமத்திற்கும் செல்லவிருக்கிறார்.