யூடியூபர் மாரிதாஸ் கைது – கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்பியதாக நடவடிக்கை
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அரசின் மீது அவதூறு உருவாக்கியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை, நீலாங்கரையில் உள்ள வீட்டில் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று மாலை: நீதிமன்றத்தில் திமுக கும்பல் நடத்திய மொத்த நாடக விவரம் வீடியோவாக வெளியிடப்படும். 10 ரூபா பாலாஜி.. விஜய் எதிராக நடந்த நீதிமன்றத் தந்திரம் மாலை 6 மணிக்கு” என்று பதிவிட்டிருந்தார். மேலும், சில நிமிடங்களில் பின்னர், “என் இல்லத்திற்கு காவல் துறை வந்து கைது செய்ய வருகிறது” எனவும் ட்வீட் செய்தார்.
கரூரில் 27-ம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஹெச். தினேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்தபோது, “கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பவத்திற்கான காணொளிகள் வேதனை ஏற்படுத்துகின்றன. இதில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்; மற்ற நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? அனைத்தும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. நெரிசலில் உயிரிழந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு, தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் ஓடியுள்ளனர். சம்பவத்துக்கு பொறுப்பேற்காமை கண்டனத்துக்குரியது” என நீதிபதி கூறி வழக்கை முடித்தார்.
இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக முன்னர் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (38), தவெக மாங்காடு உறுப்பினர் சிவனேசன் (36), ஆவடி வட்டச் செயலாளர் சரத்குமார் (32), யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த வரிசையில் மாரிதாஸும் சேர்ந்து இருக்கிறார்.