திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 5) கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘சக்தி’ என்ற தீவிர புயல் தற்போது அந்தப் பகுதியில் நிலவுகிறது. இது படிப்படியாக வலுவிழந்து, வடகிழக்கு திசையில் நகரும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்திய மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று மாநிலம் முழுவதும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 செ.மீ, திண்டுக்கல்லில் 11 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை, செம்மேடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box