10.10 கி.மீ நீள உயர்மட்ட அவிநாசி சாலை மேம்பாலம்: முக்கிய அம்சங்கள்
கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட புதிய அவிநாசி சாலை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் அக்.9-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார்.
கோவை–அவிநாசி சாலையில் அதிகமான போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை ரூ.1,791.23 கோடி செலவில், 10.10 கி.மீ தூரத்திற்கு உயர்மட்டப் பாலம் கட்ட திட்டமிட்டது. இதன் திட்டப்பணி 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து, மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
மேம்பாலத்தின் சிறப்பம்சங்கள்:
- மொத்த நீளம்: 10.10 கி.மீ
- ஓடுதள அகலம்: 17.25 மீட்டர்
- தூண்கள்: 304
- கோவை–அவிநாசி சாலையில் 4 வழி உயர்மட்டப் பாலம், 6 வழி விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை ஆகியவற்றைச் சேர்த்து, மொத்தம் 10 வழித்தடங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் இதுவே மிக நீளமான உயர்மட்ட பாலம்.
ஏறுதளங்கள் மற்றும் இறங்குதளங்கள்:
- உப்பிலிபாளையம்–கோல்டுவின்ஸ்: அண்ணாசிலை, பீளமேடு (ஏறுதளங்கள்); ஹோப்காலேஜ், விமான நிலையம் (இறங்குதளங்கள்)
- கோல்டுவின்ஸ்–உப்பிலிபாளையம்: விமான நிலையம், ஹோப்காலேஜ் (ஏறுதளங்கள்); பீளமேடு, அண்ணாசிலை (இறங்குதளங்கள்)
முக்கிய உயரங்கள்:
- விமான நிலைய ஏறுதளம்: 577 மீ, இறங்குதளம்: 567 மீ
- ஹோப்காலேஜ் ஏறுதளம்: 483 மீ, இறங்குதளம்: 527 மீ
- நவ இந்தியா ஏறுதளம்: 561 மீ, இறங்குதளம்: 551 மீ
- அண்ணாசிலை ஏறுதளம்: 411 மீ, இறங்குதளம்: 391 மீ (நீதிமன்ற வழக்கால் ஏறுதளம் நிலுவையில் உள்ளது)
சாலைக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய அமைப்புகள்:
- கோல்டுவின்ஸ் அருகே 183 மீ, உப்பிலிபாளையம் அருகே 267 மீ அணுகு சாலைகள்
- ஹோப்காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம்: 52 மீ நீளம், 8 இரும்பு கார்டர்கள், எடை: 725 டன்
- 20க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
- புதிய தொழில்நுட்ப ‘சைனஸ் பிளேட்’ பொருத்தம், அதிர்வு மற்றும் சத்தம் குறைக்க
பயண நேரம் குறைப்பு:
கோவை–விமான நிலையம் பயணம் 45 நிமிடத்திலிருந்து 10 நிமிடத்திற்கு குறைகிறது. கோவை–சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி பயணத்தில் முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடக்க வேண்டியிருந்தது; தற்போது மேம்பாலத்தின் மூலம் பயண நேரம் குறைந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கருத்து:
“2020-ல் அறிவிக்கப்பட்ட, 2021 மே வரை 5% பணிகள் மட்டுமே நடைபெற்ற அவிநாசி சாலை மேம்பால பணிகள், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று 95% பணிகளை விரைந்து முடித்துள்ளது. கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் இந்த உயர்மட்ட மேம்பாலத்தை அக்.9-ம் தேதி திறந்து வைக்க உள்ளேன். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்திற்கு சூட்டுகிறேன்.”