வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை

வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல ஜவுளிக்கடை நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

பெண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்யும் இந்த பிரபல ஜவுளிக்கடை நிறுவனம் சென்னை, சேலம், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 700-க்கும் மேற்பட்ட துணிக்கடைகளை கொண்டுள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் ஆடைகளுக்காக முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு நிகழ்த்தப்படுவதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகங்கள், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உட்பட சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகள் என 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: “சோதனை முழுமையாக முடிந்த பின்னர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்கள் வெளியிடப்படும்.”

Facebook Comments Box