தமிழகத்தின் மிக நீளமான கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு: முக்கிய அம்சங்கள்
கோவையில் 1,791 கோடி ரூபாய் செலவில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கி.மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைப் பற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான 10.10 கி.மீ. நீளமுள்ள நான்கு வழித்தட மேம்பாலம் “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என்று மக்களுக்கு பயன்பாட்டிற்காக திறந்தார்.
ஜி.டி. நாயுடு மேம்பாலம்: கோவையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்த மேம்பாலம் நகரின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள அவிநாசி சாலை (SHU-52) மீது கட்டப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் ரயில் நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம் செல்லும் வழிகள், விமான நிலையம், கொடிசியா, பி.எஸ்.ஜி., சி.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.எம்.சி.எச் மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த மேம்பாலம் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.10 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டு, கோவையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை என்றால் புதுமை எனப்படும் நகரத்திற்கு, இந்தியாவின் எடிசன் மற்றும் தந்தை பெரியாரின் நெருங்கிய தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை முதல்வர் மேம்பாலத்திற்கு சூட்டினார்.
புதிய பொறியியல் கட்டுமானத்துடன், இந்த உயர்மட்ட மேம்பாலம் போக்குவரத்தை பாதிக்காமல், சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் கோவை “IT Corridor”, தொழிற்சாலைகள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைத்துக்கும் தடையில்லாத போக்குவரத்தை வழங்குகிறது, நகரின் புறநகர் பகுதிகளை விரைவாகச் செல்ல வழிகாட்டுகிறது.
மேம்பால கட்டுமானத்திற்கு செக்மண்டல் கட்டுமான முறை (PSC Segmental Construction) பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் அமைப்பும் நெடுஞ்சாலைத் துறையின் வடிவமைப்பு அலகினால் சோதிக்கப்பட்டது.
மேம்பாலத்தால் இணைக்கப்படும் சாலைகள்: மேம்பாலம் அண்ணா சிலை இறங்கு தளம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைக்கிறது. நவ இந்தியா இறங்கு தளம் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி சாலையை, நவ இந்தியா ஏறு தளம் அவிநாசி, திருப்பூர் மற்றும் சேலம் சாலைகளை இணைக்கிறது. ஹோப் காலேஜ் ஏறு தளம் திருச்சிராப் பள்ளி மார்க்கத்தை தேசிய நெடுஞ்சாலை (தே.நெ.67) உடன் இணைக்கிறது. ஹோப் காலேஜ் இறங்கு தளம் திருச்சிராப் பள்ளி சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையை இணைக்கிறது. விமான நிலைய இறங்கு தளம் நீலாம்பூர், சேலம் – கொச்சின் சாலையை இணைக்கிறது. விமான நிலைய ஏறு தளம் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகள், காந்திபுரம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கிறது.
மேம்பாலத்தின் பொறியியல் சிறப்பம்சங்கள்: இப்பணியில் நான்கு வழித்தட மேம்பாலம் மற்றும் ஆறு வழித்தடத்துடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட தரைத்தள சாலை போன்ற மொத்தம் 10 வழித்தடங்கள் 10.10 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என மொத்தம் நான்கு இடங்களில் இறங்கு தளங்கள் மற்றும் மற்ற மூன்று இடங்களில் ஏறுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 1.50 மீ. அகலத்தில் நடைபாதை, வடிகால் அமைப்பு, சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள், சிறந்த பயண வசதி மற்றும் ஒலி குறைப்பு வசதிகள் ஆகியவை உள்ளன.
மேம்பாலத்தின் மற்ற சிறப்பம்சங்கள்: பாலத்தின் ஓடு தளத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நிலத்தடி நீர் வள மேம்பாடு, சென்டர் மீடியனில் நடப்பட்டுள்ள செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தரைமட்டத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சோலார் மின்சார விளக்குகள், பாதுகாப்புச் சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள் போன்ற உலக தரத்திற்கேற்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
இந்த உயர்மட்ட மேம்பாலம் மூலம், கோயம்புத்தூர் இருந்து விமான நிலையம் செல்லும் பயணம் 45 நிமிடத்திலிருந்து 10 நிமிடமாக குறைகிறது. பெருவாரியான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள், அவசர சேவை பயனாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் பாலாஜி, ஈஸ்வரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.