நவாஸ்கனி வெற்றிக்கு எதிரான வழக்கில் ஓ.பி.எஸ் நேரில் ஆஜர்; 38 ஆவணங்கள் தாக்கல்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் பின்னர், நவாஸ்கனி வெற்றி நிலையை எதிர்த்து, பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். மனுவில், வேட்புமனுக்களில் உண்மையை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் செய்யப்பட்டன.
வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அதேநேரத்தில், ஓ.பி.எஸ் நேரில் ஆஜராக 38 ஆதார ஆவணங்களை தாக்கல் செய்தார். நவாஸ்கனி தரப்பில் சில ஆவணங்கள் குறைபாடுகள் கொண்டதாகவும், முழுமையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, குறைபாடுகளை சரிசெய்து முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்ய ஒ.பி.எஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.