“அதிமுக ஆட்சி அமைந்ததும் கிட்னி முறைகேடு விசாரிக்கப்படும்” – நாமக்கல்லில் பழனிசாமி உறுதி

நாமக்கல்லில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடுகளை முழுமையாக விசாரித்து, இதில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

பழனிசாமி கூறியதாவது: திமுக ஆட்சியில் குடிநீரில் மலம் கலக்கப்படுவது சாதாரண நிகழ்வு ஆகி உள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. அப்படி திறமையற்ற அரசு நாட்டை ஆண்டுள்ளது. சமீபத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நீர் காணப்பட்ட சம்பவம் இதனை உறுதிப்படுத்துகிறது.

மேலும், திமுக ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு நிலைமைக்கு வந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாலும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்; இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் காவல் துறையினால் பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

பழனிசாமி, எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அரசின் கடமையாகும் என்றும், அதிமுக கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சி 7 மாதத்தில் முடியும்; அதன்பின் அதிமுக ஆட்சி அமையும்.

மேலும், காஞ்சிபுரம் அருகே இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாக 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை எடுத்துக்காட்டினார். மதுரை மாநகராட்சி மற்றும் திண்டுக்கல்லில் ஊழல் நிகழ்ந்தது குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

பழனிசாமி, விவசாயம், விசைத்தறி, லாரி மற்றும் கோழிப்பண்ணை போன்ற தொழில்களில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டங்களையும் குறிப்பிட்டார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்கள் பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துக்கொண்ட சம்பவம், பள்ளிபாளையத்தில் பெண்ணுக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரல் எடுத்த சம்பவங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறினார்.

நாமக்கல்லில் தனியார் ஹோட்டலில் விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழனிசாமி உறுதி செய்தார்.

பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, சரோஜா, விஜயபாஸ்கர் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Facebook Comments Box