வடசென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முக்கிய ரவுடி நாகேந்திரன் நேற்று காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடியை தாயகமாகக் கொண்டவர் நாகேந்திரன் (52). இவருக்கு உஷா மற்றும் விசாலாட்சி எனும் இரு மனைவிகள் உள்ளனர்; மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளனர்.

மூத்த மகன் அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும், முன்னாள் காங்கிரஸ் மாணவரணி தலைவராகவும் இருந்தார். இரண்டாவது மகன் அஜீத்ராஜ் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்; மூன்றாவது மகள் ஷாலினி. ஆரம்பத்தில் நாகேந்திரன் ரவுடி வெள்ளை ரவியுடன் இணைந்து செயல்பட்டார்.

அந்தகாலத்தில் வியாசர்பாடி ரவுடியான சேராவுடன் ஏற்பட்ட சண்டையின் விளைவாக, சேராவின் நெருங்கிய துணைவனான சுப்பையாவை வெள்ளை ரவியுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்றார். அந்த முயற்சியில் உயிர் தப்பிய சுப்பையாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் முன்னிலையில் கொன்று விட்டார்.

பின்னர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டபோது, போட்டியாளரான ஒருவரை கொலை செய்ததும் சிறை தண்டனை அனுபவித்து திரும்பியதும் குறிப்பிடத்தக்கது. அந்த கொலை குறித்து அதிமுக பேச்சாளர் ஸ்டான்லி சண்முகம் மேடையில் பேசியதால், 1997ஆம் ஆண்டு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நாகேந்திரனுக்கு 1999ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, 2003ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதன்பின் புழல் சிறையில் இருந்தபடியே கட்டப்பஞ்சாயத்து, கொலை, ஆள்கடத்தல், செம்மரக் கடத்தல் உள்ளிட்ட பல குற்ற நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார். வடசென்னையை தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்.

கடந்த ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே முக்கிய மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவரும், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்தபோது நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலை 10.30 மணியளவில் உயிரிழந்தார்.

சுமார் 35 ஆண்டுகளாக ரவுடித் துறையில் இருந்த இவர்மீது 5 கொலை, 12 கொலை முயற்சி, மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட மொத்தம் 26 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

Facebook Comments Box