ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: 30 பேர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு
இலங்கை கடற்படையினர் கைது செய்த 30 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ராமேசுவரம் கடல்பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஹரிகிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோரின் சொந்தமான நான்கு விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டன. அதில் இருந்த 30 மீனவர்களும், எல்லை மீறி மீன்பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, வவுனியா சிறையில் நீதிமன்ற காவலில் அக்டோபர் 23 வரை அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர் பிரதிநிதி சேசுராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்ததுடன், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அதன் பகுதியாக, சனிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது.