தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் செந்தில்பாலாஜி அன்னதானம்
புரட்டாசி மாதம் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அன்னதானம் வழங்கினார். மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இன்று (அக்.11) அதிகாலை, புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு கோயில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து சாமி தரிசனம் செய்தனர்; பலர் முடி இறக்கி நேர்த்திக் கடனைச் செய்தனர்.
கல்யாண வெங்கடரமண சுவாமி அறக்கட்டளை சார்பில், தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் தாதர்கள் (சங்கு ஊதுபவர்கள்) மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தாதர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு பரிமாறி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தாதர்களுக்கு வெற்றிலை பாக்குடன் தட்சணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் ப. சரவணன், திருப்பணிக்குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் காமராஜ், வழக்கறிஞர் குடியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கோயிலில் பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.
அதிமுக சார்பில் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு பூஜை, வழிபாடு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உணவு பரிமாறி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இணை செயலாளர் மல்லிகா, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.எஸ். கண்ணதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதே பகுதியில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பிலும் அன்னதானம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை கரூர் தெற்கு பகுதி துணைத் தலைவர் எஸ்.கே. சஞ்ஜித் செய்திருந்தார். கோயிலை சுற்றியுள்ள மண்டபங்கள் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் அன்னதானம் பெற்றனர்.