ராமருக்கு வரலாறு இல்லை என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் சிவசங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பத்தியில், ஸ்ரீராமன் மீது திமுகவினர் திடீரென பற்றுக்கொண்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

சமூக நீதியின் உச்சமானவர் ஸ்ரீராமர் என்றும், அனைவருக்கும் சமத்துவத்தை போதித்தவர் அவர்தான் என்றும் திமுக அமைச்சர் ரகுபதி சில நாட்களுக்கு முன்பு கூறியதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, தற்போது ஊழல்மிக்க அமைச்சர் சிவசங்கர், ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளதெனவும் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியபோது அதனை எதிர்த்தவர்கள் தான் திமுகவினர் என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, ராமரின் வரலாறு பற்றி அமைச்சர் ரகுபதியிடம் சிவசங்கர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்

இரு அமைச்சர்களும் கலந்தாலோசித்து ராமர் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என விமர்சித்துள்ள அவர், இதன்மூலம் பகவான் ஸ்ரீ ராமரிடம் இருந்து பல விஷயங்களை சிவசங்கர் கற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் கூறினார்.

Facebook Comments Box