WhatsApp Channel
பிரான்சில் பாலஸ்தீன ஆதரவு பேரணி வன்முறையில் வெடித்தது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காசா நகரம் சிதைந்து வருகிறது. அதேபோல், ஹமாஸ் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேலிய நகரங்களை தாக்கி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், பலஸ்தீனம் மற்றும் உலகின் பல நாடுகளில் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் யூத எதிர்ப்பை தூண்டும் என்ற அச்சத்தின் மத்தியில் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை தடை செய்துள்ளன. அந்த வகையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அரசு விதித்த தடையை மீறி தலைநகர் பாரிசில் நேற்று இரவு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டனர். லில்லி, போர்டோ மற்றும் பிற நகரங்களிலும் பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன. தடையை மீறி போராட்டம் நடத்தியதால், பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார், மக்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் அதை ஏற்க மறுத்து, காவல் துறையினர் தடுப்புக் கட்டைகளை மீறிச் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது.
இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பாரிஸ் உட்பட பல இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது.
பல போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்கள் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களை போர்க்களமாக மாற்றியது. வன்முறையில் ஈடுபட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, பேரணிகளுக்கு பிரான்ஸ் அரசு விதித்துள்ள தடை கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த போராட்டம் குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன், உள்நாட்டு பிளவுகளை உருவாக்க வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “சர்வதேச பிளவுடன் தேசிய பிரிவினைகளை சேர்க்க வேண்டாம்.பிரான்ஸ் மக்கள் ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஹமாஸ் என்பது இஸ்ரேல் மக்களின் மரணத்தை விரும்பும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 13 பிரான்ஸ் பிரஜைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post