“பணம் பகிர்ந்தாலும் ஆட்சி மாறும் என்பது உறுதி” – நயினார் நாகேந்திரன்
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்களின் மாநாட்டை முன்னிட்டு மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசும்போது நயினார் நாகேந்திரன் கூறியது:
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையை நோக்கி செல்லும் ஆழ்ந்த பக்தியுள்ளவர் என்றாலும், அவர் தற்போது இருப்பது தவறான இடம் என்று தெரிவித்தார். அதனால் தான் முருக பக்தர்களின் மாநாட்டை “சங்கிகள் மாநாடு” என விமர்சிக்கிறார் என கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடந்திருக்க வேண்டும். அப்போது தான் “யார் அந்த சார்?” என்பது தெளிவாகி இருப்பதும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது தவறு என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் ஒரத்தநாடு, சென்னை போன்ற இடங்களில் நடந்த பாலியல் குற்றங்கள் 157 நாட்களிலேயே முடிவடைந்ததா என்றும் கேள்வி எழுப்பினார். அனைத்து வழக்குகளுக்கும் முதல்வர் கவனம் செலுத்தியிருந்தால் நன்மை செய்திருக்குமெனவும் கூறினார்.
ஸ்பெயின் நாட்டில் எம்.பி கனிமொழியிடம் “உங்கள் தாய்மொழி என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் வழங்கிய பதிலில், இந்தியாவின் தேசிய மொழி குறித்த உண்மை வெளிப்பட்டதாகவும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதே இந்தியாவின் பலம் என்றும் கூறினார். தேமுதிகவை கூட்டணியில் வருமாறு காங்கிரஸ் மாநில தலைவர் அழைத்துள்ளதைத் தேர்தல் நேரத்தில் நடக்கும் சாதாரண நடவடிக்கையாக அவர் விளக்கினார்.
வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது குறித்து அவர் பேசும் போது, “முதலில் திருமங்கலம் முறை என்று சொன்னார்கள், இப்போது பென்னாகரம் முறை என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சி பெட்டி பெட்டியாக பணம் வழங்கத் தயாராகிறது” என தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜயின் கூற்றின்படி, முதலாவதாக ரூ.1000 வழங்கினர், இப்போது ரூ.5000 வரை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிச்சயம். பாமக எங்கள் கூட்டணியில் தொடரும் என்றும் நயினார் நாகேந்திரன் உறுதியாக தெரிவித்தார்.