பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
மத்திய அரசின் பல திட்டங்களைத் தடுக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகியுள்ளது. கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன; பொதுச் சிவில் சட்டம் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. இதற்கிடையே, திமுக தனது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 50-க்கும் குறைவாகவே செயல்படுத்தியுள்ளது.
மத்திய பள்ளிக்கல்வித் திட்டத்தில் ஒப்புதல் அளித்தும், பின்னர் செயல்படுத்த முடியாது என கூறுகின்றனர். ஜவுளித்துறையின் பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சருடன் தொழிலதிபர்களை சந்திக்க ஏற்பாடு செய்தோம்.
கோவை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகும் காரணம் திமுக அரசு தான். விஸ்வகர்மா, ஜெனரிக் மருந்தகங்கள் போன்ற மத்திய திட்டங்களை மற்ற மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்றன; ஆனால் தமிழகத்தில் மாநிலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, மத்திய திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கீழடி தொடர்பாக மத்திய அரசு கேட்கும் தகவல்களும் மாநில அரசு தர மறுக்கிறது.
நான் பாஜகவில் ஒரு தொண்டனாகவே உள்ளேன்; கட்சியின் வளர்ச்சிக்காகவே செயல்படுகிறேன். கட்சி தலைமை எடுத்த முடிவுகளை மதித்து நடப்பேன். எங்கே பேச வேண்டுமோ பேசுவேன், எங்கே அமைதியாக இருக்க வேண்டுமோ அங்கே அமைதியாக இருப்பேன். எனக்கு தனிப்பட்ட ஆதரவாளர்கள் இல்லை – அனைவரும் என் நண்பர்களே.
பாமக தொடர்பாக ராமதாஸும், அன்புமணியும் முக்கியமானவர்கள்; இருவரும் ஒரே கருத்தியல் போக்கில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ராணுவ உற்பத்தித் திட்டங்களை உ.பி. போன்ற மாநிலங்கள் முன்னெடுக்க, தமிழக அரசு ஒத்துழைக்காததே காரணம்.
அண்ணா பல்கலை விவகாரத்தில் பல கேள்விக்குறிகள் உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் குற்றவாளி என நான் கூறவில்லை; ஆனால் அவர் மீது விசாரணை நடந்திருக்க வேண்டும். இரு காவல் அதிகாரிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞரிடம் கூறியுள்ளேன். தேவையான ஆதாரங்களை வழங்க தயார்.