நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

0

கடலூர் கூத்தப்பாக்கத்தில் தேவநாத சுவாமி கோயிலின் சொந்த நிலத்தில் இயங்கும் தனியார் பள்ளியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில், பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐந்து ஐஏஎஸ் அதிகாரர்கள் உட்பட ஏழு அதிகாரிகள் ஜூலை 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான, கூத்தப்பாக்கத்தில் பல கோடி மதிப்புள்ள 6.10 ஏக்கர் நிலத்தில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியை அங்கு இருந்து அகற்றி, நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.வினோத் ராகவேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பள்ளிக்கு மாற்றுத் தரப்பில் இடம் ஒதுக்கி, நிலத்தை மீட்டு கோயிலுக்கு ஒப்படைக்கவேண்டும் என்ற உத்தரவை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவை சரிவர அமல்படுத்தவில்லை என்று தெரிவித்து, வருவாய் துறைச் செயலர் பி. அமுதா, பள்ளிக் கல்வித் துறைச் செயலர் எஸ். மதுமதி, அறநிலையத் துறைச் செயலர் பி. சந்திரமோகன், ஆணையர் பி.என். ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் ஜெ. பரணிதரன், தேவநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் பள்ளித் தாளாளர் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் ஐந்து பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, அதிகாரிகள் அனைவரும் ஜூலை 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here