அரசுப் பள்ளியில் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் கொண்டாட்டம் – தமிழக பாஜக கண்டனம்
அரசுப் பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதைத் தொடர்ந்து, மாவட்ட அமைச்சர்கள் சிறு மன்னர்களைப் போல நடந்து கொள்கிறார்களா? என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அங்கு மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும் பாடல் பாடி வாழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த மாநில அரசுக்கு திறமையில்லாமல், அமைச்சர்களின் புகழ்ச்சி விழாக்களுக்கு பள்ளிகளை பயன்படுத்துவது முழுமையான சர்வாதிகாரமாகும். பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவகாரம் குறித்து அறிந்தவரா? அவரது ஒப்புதலுடன்தான் மாணவர்கள் பிறந்தநாள் பாடலை பாடினார்களா?
மாவட்ட அமைச்சர்கள் சிறு அரசர்களைப் போல செயல்படுவதை முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கிறாரா? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் கோரிக்கை விடுக்க வேண்டும். அல்லது தன்னால் துறையை சரியாக கையாள முடியவில்லை என்று ஒப்புக்கொண்டு அன்பில் மகேஷே பதவி விலக வேண்டும். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.