பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது: நயினார் நாகேந்திரன்
“அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. மேலும், தேர்தலுக்கு இன்னும் 6–7 மாதங்கள் உள்ளன. தற்போது திமுக சார்பில் ‘உங்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வீதி வீதியாக சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டிய சூழல் உள்ளது.
ராசிபுரத்தில் இபிஎஸ் பேசிய கூட்டத்தில் 30,000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களின் எழுச்சி எங்கள் கூட்டணிப் பக்கம் தான் இருக்கிறது. டெல்லியில் அமித் ஷா உடன் பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்தேன்.
அரசியலில் ஒருவரின் கருத்தை நிரந்தரமாக ஆதரிக்கவும், எதிர்க்கவும் முடியாது. தமிழகத்தை வட, தென் எனப் பிரிக்க தேவையில்லை. கொங்கு நாடாக இருந்தாலும் சரி, வடக்கு பகுதியாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி.
தம்பி விஜய் இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கும் இவர்களுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும், மக்கள் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் முடிவு சொல்ல முடியும். தற்போது ஜோசியம் எதையும் சொல்ல முடியாது.
வரும் 11ஆம் தேதி எனது சுற்றுப்பயணம் ஆரம்பமாகும். மதுரையிலிருந்து தொடங்கலாம் என எண்ணுகிறேன். பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என்றார்.
பின்னர், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தினகரன், பன்னீர்செல்வம் மீண்டும் வருவார்களா?” என்ற கேள்விக்கு, “அதை அவர்களிடமே கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.