மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
“ஜிஎஸ்டி வரி குறைப்பை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். பாஜக வாக்குத் திருட்டு செய்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். ஆனால், வாக்குத் திருட்டு நடந்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான். நாங்கள் அப்படி செய்திருந்தால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது.
தமிழக மீனவர் பிரச்சினையில் பாஜகவை விமர்சித்து நடிகர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார். திமுகவும், தவெகாவும் மட்டுமே போட்டியாளர்கள் என்று அவர் கூறி வருகிறார். ஆனால், அவர் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அரசியலுக்கு புதியதாக வந்தவர், உடனே ஆட்சியில் அமர்ந்து விடலாம் என நினைக்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவருக்கு வாக்களிப்பார்களா என்பதை அவர் சிந்திக்க வேண்டும்.
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் பரவுகின்றன. ஆனால், அவர் எங்கள் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்; இன்றும் பாஜகவில் உள்ளார். இதுபோன்ற தகவலை பரப்புவது ஊடகங்களா அல்லது திமுகவா என்பது தெரியவில்லை. புதிய கட்சி தொடங்குவதாகப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன, ஆனால் அதை யார் ஒட்டினர் எனவும் தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் பாஜக தலையிட முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணிக்கு திரும்ப விரும்பினால், நாங்கள் வரவேற்போம். அரசியலில் நிரந்தரமான எதிரி அல்லது நண்பர் எவரும் இல்லை. திமுக கூட்டணி, கொள்கை அடிப்படையிலான ஒன்றல்ல.”
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.