திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரிப்பு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு?

2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023-இல் 15% அதிகரித்துள்ளது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023-ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா?

கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன. இது தான் ஓரணியில் தமிழ்நாடா? சகட்டுமேனிக்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் காட்டாட்சியை நடத்தி மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நாடு போற்றும் நல்லாட்சி இது என்று நாற்திசையிலும் நாடகமாடுவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும்” இவ்வாறு நயினர் நாகேந்திரன் தெரிவித்தார்.

Facebook Comments Box