காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவித்ததற்கு வைகோ கண்டனம் – பாஜகவினரை கண்டித்தார்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக கண்டித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை இப்படி:

மதுரையில், 1959-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் வரலாற்றில் பெருமை பெற்றதாகும். கடந்த 1921-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மேலாடை அணிய முடியாத வறுமையில் இருப்பதை கண்டு மனம் வருந்தினார். இதனால் செப்டம்பர் 22-ம் தேதி அவர் எடுத்த உறுதி:

“நாடு முழுவதும் நம் மக்கள் மேலாடை அணியும் நிலை வரும்வரை நான் மேலாடை அணிவதில்லை.”

காந்தியடிகள் அணிந்த ஆடை காந்தி அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அவரது பிறந்த நாளில் பாஜகவினர் அந்த சிலைக்கு காவி ஆடை அணிவித்துள்ளனர்.

வைகோ குறிப்பிட்டதாவது, காந்தியை கொன்ற நாதுராம் விநாயக கோட்சே, ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர் மற்றும் மதவாதக் கூட்டம் காந்தியின் கொலைக்கு திட்டமிட்டது என்பது வரலாற்றில் ரத்த அத்தியாயங்களாக உள்ளது. மகாத்மா காந்தி உயிரை தியாகம் செய்து மதநல்லிணக்கத்தை பாதுகாத்தவர். அதனால், அவரது சிலைக்கு காவி ஆடை அணிவித்தது மதுரையில் கடுமையாக கண்டிக்கத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box