WhatsApp Channel
புரட்டாசி மாத வரபிறை பிரதோஷ பௌர்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் புகழ்பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்படி, வரும் 29ம் தேதி புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு, 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவதில்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மலை ஓடைகளில் குளிக்க வேண்டாம். மலைக்கோயிலில் இரவு தங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post